April 7, 2007


ஓவியக் கண்காட்சியும் பலூனும்

முன்னே ஒரு பரந்த மைதானத்துடன்
ஊரை விட்டுத் தள்ளியிருந்த
அக்கட்டிடத்தின்
மொட்டைமாடியில் வைக்கப்பட்டிருந்த
வித்யா-பூர்ணானந்த்-ன் ஓவியங்களைப் பார்த்துவர
மாலையில் நாம் சைக்கிளில் சென்றபோது
நீ ஜீன்ஸ் உடுத்தி தலையில் பூவும் அணிந்திருந்தாய்.
நீண்ட நேரம் அங்கிருக்க முடியாமல்
இளநீர் அருந்திவிட்டு
சைக்கிளைப் புறக்கணித்து
மைதானம் தாண்டி வடக்கே செல்லும்
இருமருங்கிலும் முட்புதர் மண்டிக்கிடக்கும்
மாட்டுவண்டிப் பாதையில் நடந்தோம்.
மேற்கிலிருந்து சூரியக்கதிர்கள்
மிகமுயன்று முட்புதர்தாண்டி
வண்டிப்பாதையின் புழுதியில்
பொட்டுக்களாய் விழுந்தன.
இன்னும் நடந்தால்
கிணறுகளையும் காற்றுடன்
பேசிக்கொண்டே நடனமிடும்
பச்சை நாற்றுகளையும் பார்க்கலாம்.
எதிர்ப்புறத்திலிருந்து
திடீரென்று சிறார்க்கூட்டம்
நம்மை கடந்து ஓடியதைப் பார்த்து
நாம் திரும்பி நடக்கவாரம்பித்தோம்.
மைதானத்திற்கு வந்திருந்த
பலூன் விற்பவன்
பலூனை சிறார்களுக்கு
இலவசமாக வினியோகித்துக் கொண்டிருந்தான்.
நீ ஓடிச் சென்று
ஒன்று வாங்கிகொள்வாய் எனக் காத்திருந்தேன்.
சிறார்களின் மகிழ்ச்சி
உன் முகத்திலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

(07.09.2001)

No comments: