April 25, 2012


மூவர் படகு

முடிந்துபோய்விடுகிற தொலைவுகளில்
உலகமும் வானமும் எப்படி இருந்தாலும் அங்கே
நிற்கும்போது ஏற்படுகிற மௌனங்களை
அறியாத தண்ணீர்,
ஆழங்குறைந்த இடத்தில்
தெள்ளிய சலனத்திலிருந்த மணல்துகள்கள்
’தலை’ விழுந்து மூடிக்கொண்டிருந்த காசு கண்ணில் பட்டது
அள்ளிப்பருகாத தண்ணீர்,
மெய்யென்ற உணர்வுகள் எழுந்தபிறகு மறந்துபோகாத கனா
குடம், குவளை, பாத்திரக்கலன்களில் பொங்கி
ஊர்த்தெருக்களில் புகுந்த நீராக,
ஊர் எல்லை வரை, செங்கல்சூளைத்திடலிலும் நிறைந்து
சிற்றலைகளோடு புதிய சருகுகள் மிதந்த, குளிர்ந்திருந்த தண்ணீர்,
துள்ளிப்பாய்ந்து படகிலே விழுந்த மீனுக்கு
நாங்கள் இறங்கிச்சென்றபோது இன்னும்
காய்ந்து கூடியிருந்த மினுமினுப்பு, நின்று பார்த்தோம்
தன்னந்தனியாக தூயவானத்தில் கிருஷ்ணப்பருந்து
சரேலென்று இறங்கி வளைந்து பறந்த வேகம்
தடுமாற்றமில்லாத திசைகளில்தான் முழுமை
இருள் கூடிவந்த மாலையில்
எண்ணற்றுப் பறந்த ஈசல்களிடையே
படகிலே ஏறும்முன்பு பேசிய சொற்களின் சாரம்தான்
அடுத்தவரின் கைகளிடத்தில் செய்துகொண்ட அலங்காரம் போல
நாங்கள் பகிர்ந்துகொண்டது

March 17, 2012


விபத்தோரம் பட்டாம்பூச்சிகள்

பகிரச்செய்த தேநீர் கவனம் தாண்டி கொதித்ததால் கசப்பு
கூடுமிடத்தின் நேற்றைய விபத்து நெற்றியில் இல்லை
பண்டம் கேட்ட சிறுவனாய் நின்றவனுக்கு பட்டாம்பூச்சிகள்
சாகசமாகக் கடந்த ஆட்டமைதானத்தில் நிற்கவேண்டாம்

March 4, 2012


திக்குவாய் சத்தியங்கள்

கம்பளிப்பூச்சிகள் விழுந்த முருங்கைமரம் பூத்திருக்கிறது
சிறிய பூனை பற்றி ஏறிய இடங்களில் பிசின் வழிகிறது
மேல் வயிற்றில் இரத்தநீர் கசிந்து வந்த நகக்கீறல்கள்
எப்படியோ, நுழைந்த கூட்டத்தில் தெரிந்துவிட்டது

February 8, 2012


சஞ்சாரம்

திறந்திருக்கிற பொட்டலில்
நடமாட்ட சேதம்
உள்ள எலும்புகள் உன்னோடு

January 28, 2012


நவம்பரிலும் டிசம்பரிலும்

வளர்கிற இரவுகளில் காந்தமுள் புலமிழந்துவிட்டது
தொலைநோக்கியின் முன் கையசைத்துப் பார்க்கிறேன்
காற்றிலே உன் தலை, பூ, எல்லாம், காலம் புனைந்தது
ஒவ்வாத அதிர்வெண் காக அலகுகளைத் திறக்கிறது

January 8, 2012


வராமல் போனவருக்கு - IV

இவ்வுலகத்தில் எத்தனை
பாம்புகள் இருந்தாலும்
இருப்பை மறந்து தூங்கு