October 19, 2010


மத இரவின் பாலரும்புகள்

(1)

பூனைகள் திறந்துசென்ற கதவுகளை பிறகு யாரும் தொடவில்லை,
முழுமையடைந்த இருளுக்குள்ளே கால்நீட்டிப் படுத்திருக்கும்

வீதியில், உலர்ந்த வடிகாலாய் விழும் வீட்டு ஒளி


(2)

இன்னும் இன்னும் தீர்க்கமாய், நம் கண்கள்,
அயராமல், சலுகையின்றி முரண்படும் வண்ணங்கள்

அருகருகே, துல்லியமாய் வகுத்த சின்னஞ்சிறு சதுரப் பாத்திகளில்
கருப்புவெள்ளை துருவங்கள், வீரிய காந்தப்புலத்தில்

விளையும் பயிர் நம் கனவு, நடுநிலையானது,
நெடுங்காலம் தீராத அசௌகரியம், நம் விரலசைவில்

ராஜா ராணிகள், ஓரங்குலத் தொலைவில்


(3)

நீண்ட ஆலோசனையைக் கேட்டபின்னும் அள்ளிய நீரின் முன்னும்
சலனமேயின்றி நிற்கும் நிலைக்கண்ணாடி—

தொலைக்காட்சியின் சலனங்களை மேனியிலே உலவவிட்டு
நிழல்பருத்துவிட்ட வீட்டின் இயற்பியலாய்—

நள்ளிரவு— வெண்சுவரில் ஓர் ஆணியாய்
ஒரு புகைப்படத்தைத் தாங்கி நிற்க முடியவில்லை

ஆத்மாக்கள் இறுதியில் அடைக்கலமான துருவங்களுக்கோ
குளிர், இருளுக்குப் பரிச்சயமான உருவங்களுக்கோ

மாநிலம் அதிர மதங்கொண்டு வரும் கொம்பற்ற யானைக்கோ
அது விடுதலையைப் பெற்றுத் தரமுடியவில்லை

சூரியனைத் துளியும் காணாமல் நித்தமும் தலையளவு பூ மலரும்
தலையணை உறைகளின் தாயல்ல அது

தலைமுடி பற்றியிழுக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை
முற்றிலும், காலம் தப்பிப் பிறந்த குழந்தை அது

ஈராயிரம் ஆண்டுகள், கைரேகைகள் கயிறாய் மாற
திரிக்கப்பட்ட தேர்வடக் கயிற்றின் முனையில் நங்கூரம் அது