May 6, 2010


எக்கிளையில் கூடு

உனக்குப் பிடித்தமான ஆற்று வளைவில்
தனித்துயரமாய் வளர்ந்திருக்கும் புன்னைமரத்தின் கீழ்
வசதியாகக் குத்துக்காலிட்டு அமர்ந்து
                                                       எதிர்க்கரையின் மீது
கண்களைப் பதித்திருக்கும் ஓடக்காரா,
நீ ஏன் ஓடத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாய்?

விடியற்காலையில் தூறலாகப் பெய்த மழையில்
நனைந்த ஓடம் உலர்ந்து கொண்டிருக்கிறது,
ஓடத்தருகிலே நிற்கும் இந்தப்பெண்
                                                     பிள்ளைகளை வளர்த்து
வேற்றூருக்கு அனுப்பிவிட்டவள் -
முனகுவது போலவே அவள் பாடும் பாடலின் வரிகள்
உங்களுக்குக் கேட்கவில்லையா?

ஓ, நனைந்த குருவிக்குஞ்சுகள் இடும் சத்தத்தின் வழியே
கூடு எக்கிளையில் இருக்கிறது என
அவள் அண்ணாந்து தேடிக்கொண்டிருக்கிறாளே!
                                                                      தை இறுதியில்
சாம்பல் பூத்திருக்கும் வானத்தின்
நீர்ச்சொட்டுக்கள் சில அவள் முகத்திலும் விழுந்தனவே!