April 28, 2009


நிழலின் விளிம்புக்கு வெளியே நிலவொளி

ஒரு நாள் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள், அப்போது, எரிந்துகொண்டிருக்கும் ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்டி, ’இவை எதுவுமே உண்மை இல்லையா?’ என்று கேட்பார்கள், அவர்களுக்கு என்னிடமிருக்கும் ஒரு முழுநிலவின் படத்தைக் காட்டுவேன், உண்மையில் அது முழுநிலவல்ல, பௌர்ணமிக்குப்பின் ஒருநாள் தேய்ந்த நிலா, இல்லை, அது பௌர்ணமிக்கு முந்திய தினத்து நிலவு, அப்படித்தான் அவர்கள் ஏமாந்தார்கள், முதலில். அவர்களிடம் எரியும் நெருப்பைக் காட்டி, ‘அங்கே வெற்றுக் காகிதங்களும் எரிகின்றன, அவை மரங்கள் வீழ்ந்ததன் ஆவணம்’ என்பேன்.

April 13, 2009


ஓவியம் விற்பவனும் முற்பகலும்

அவனது உடல் சென்ற முறைக்கு இப்போது மெலிந்திருந்தது, நான் உள்ளங்கையை மடக்கி, காற்றை வெளியேற்றி, இறுக மூடிக்கொண்டேன், அவன் தலைக்குப் பதிலாக, நெற்றியில் குட்டினேன், அப்படியே அவனது புறங்கை விரல் எலும்புகளின் மீதும் குட்டினேன், அடுத்து அவன் தலையில் குட்டினேன், நெற்றி-புறங்கை-தலை என்ற வரிசையை மாற்றிக்கொண்டே இருந்தேன், அவனும் பதிலுக்கு அடித்தான், என் கன்னத்தில் அறைந்தான், சில அடிகள் என் தோள்பட்டையில் விழுந்தன, பத்துப்பதினைந்து குட்டுகளில் அவன் முகத்தில் வலியின் நிறமேறியது, மேலும் சில குட்டுகளைப் பெற்றுக்கொண்டு அவன் வேறுவழியில் சென்றுவிட்டான்.