September 20, 2008


வெளியே கொண்டாட்டமில்லை

வலி முதலில் வேதனையைத் தருகிறது,
வலியேற்பட்டவுடன் எல்லோரும் சொல்லிக்கொள்வது:
'இது தற்காலிகம்தான், தானாகச் சரியாகிவிடும்',
அதுவே முதல் நம்பிக்கை

பிறகு வலி அப்படியே இருந்தாலும்,
குறைந்தாலும், வேதனை பெருகுகிறது,
அதுவே அடுத்த கட்டத்திற்குத் தள்ளுகிறது,
ஒரு நுட்பமான வலியினை நோக்கி.

அவ்வலி ஒருவரும் பார்க்க இயலாதது,
பிறகு நீ வேதனைப்படுவதில்லை,
நீ வலியைக் கொண்டாடுவதில் மும்முரமாகிறாய்,
நீ வெளியே வருவதில்லை

September 9, 2008


நடனமேடையில் நின்று, இயந்திரத்தின் இசைக்கு...

அவர்கள் வேலைக்குச் செல்வதால் உண்கிறார்கள்
அவர்கள் வேலைக்குச் செல்வதால் இவர்கள் உண்கிறார்கள்
அவர்கள் உணவைக் கையிலெடுத்துக் கொண்டு செல்கிறார்கள்
அவர்கள் நின்றுகொண்டே உண்கிறார்கள்
அவர்கள் இடைவேளையின்றி உண்கிறார்கள்
அவர்கள் உணவு இடைவேளையின்றி வேலை செய்கிறார்கள்
அவர்கள் இடைவேளையின்றி வேலை செய்கிறார்கள்
அவர்கள் வேலைக்குத் தகுந்த உணவு உண்டார்கள்
அவர்கள் வேலையின்போதே உண்கிறார்கள்
அவர்கள் நேரம் தவறி உண்கிறார்கள்
அவர்கள் நான்கு வேளை உண்டார்கள்
அவர்கள் நான்கு வேளை உண்கிறார்கள்
அவர்கள் உண்ணும் உணவுக்குத் தக்க உடலுக்கு வேலை தருகிறார்கள்
அவர்கள் உண்ணும் உணவுக்குத் தக்க வேலை செய்கிறார்கள்
அவர்கள் உணவுக்காக வேலை செய்தார்கள்
அவர்கள் உணவை எண்ணாமல் உண்கிறார்கள்
அவர்கள் உணவை எண்ணாமல் வேலை செய்கிறார்கள்