February 27, 2010


கவிதை என்பது தாவரமல்ல

இன்னொரு நாள் கே.வி.எ ஆரம்பித்து வைத்தான், “கவிதை என்பது தாவரமல்ல, உரமும் அல்ல, அது பூச்சிமருந்து, பூச்சிக்குத் தெளிக்கணும், மனிதன் குடிக்கணும்” என்றான், சீசாவிலிருந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த அபி வாயிலிருந்த நீரை மிடறிவிட்டுச் சொன்னான், “ஒரு சமயத்தில் வயலெலிகளை வேட்டையாட ஆட்சேர்ப்பு நடந்துகொண்டிருந்தபோது, ஒரு கவிஞன் என்ன செய்தான் தெரியுமா? வருத்தப்பட்டு பாட்டுப் பாடினான்” என்றான், ”அது அரூபமானது” என்று சொல்லிவிட்டு, டோனியும் அதே சீசாவிலிருந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்து சொன்னான், ”கவிதை என்பது நீர்மம் போல... நீரைப் போல, தொட்டுப்பார்க்கமுடியும், ஆனால் வடிவமில்லாதது, கவிஞன் ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைக்கிறான், ஆனால்... ஆனால், அது ஆறாகவோ, கொதிக்கும் கடலாகவோ, பேரருவியாகவோ, நீராவியாகவோ, உறைந்து இளகும் பனித்துகளாகவோ வாசகனின் மனதில் அல்லது வயிற்றினுள் மாறிவிடுகிறது என்றே கொள்ளமுடியும்-கொள்ளவேண்டும், அது அங்கே ஆக்ஸிஜனாகவும் ஹைட்ரஜனாகவும் பிரிந்துகொண்டேயிருக்கும் சாத்தியமும் இருக்கவே செய்கிறது என்று யாரேனும் சொன்னால் அதை என்னால் மறுக்க முடியாது” என்றான், எனக்குக் 'கவிதை எப்படி வேறெதுவாகவோ இருக்கமுடியும்?' என்றும் அதே ச‌ம‌ய‌த்தில் 'நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்பதைப் பேசிக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே' என்றும் தோன்றியது.