April 24, 2007


உதவி செய்வதன் பொருட்டு நீ அறிந்து கொள்ள வேண்டியது

நாளை உனக்குக் கிடைக்கும் ஓலையை
தானமிட்டபின் அவனிடம் வாசித்துக் காட்டு;
நட்பே ஆனாலும்
உதவியதும் மறக்காமல்
ஓலையின் சேதியைச் சொல்லு;
உயிர்காத்தாயென யாரேனும் ஓடிவந்தால்
மீண்டும் வாசித்துக் காட்டு;
உணர்ச்சிமிகு கணங்களுக்கென
மனனம் செய்து கொள்;
அது உனது மந்திரமாகட்டும்!

April 14, 2007


அனைத்தையும் அகம் கொண்டபின்
பேரொளியின் சுயம் தனியே என்செய்யும்?

_____________________________________________
* நினைவுபடுத்திய சரவணனுக்கு நன்றி

April 8, 2007


பத்தொன்பது வயதுப் பையன்
ஒரு நீளமான வசனம் பேசிமுடிக்கும்போது
பெரும்துளிகளாய் மழை ஆரம்பித்தது.
அம்மா சொன்னாள்,
'அச்சச்சோ, கொடியில் துணி காய்ஞ்சிட்டிருக்கே!'
'இல்லம்மா, நனைஞ்சிட்டிருக்கு!'
உடன் வெளிவந்த சிரிப்புடன் மகள் சொல்ல
அப்பாவும் சிரித்தார், பக்கத்து இருக்கையை பாதிக்காத வண்ணம்.
சிரிப்பு நல்ல விசயந்தானே?

முற்றும்

நிறை நிறை
பையை நிறை
தலையை நிறை
புவியை நிறை
வெளியை நிறை
வெற்றிடத்தால்
உன்னை நிறை

April 7, 2007


அருகிலே ஒரு

தொடுவானம்வரை பரவியிருக்கிறது
பச்சைப் புல்வெளி.
குறுக்காக மேற்கு நோக்கிச் செல்லும்
ஒற்றையடிப்பாதை.
அங்கும் இங்கும் தனித்தனியாய்
இன்னும் காடாக மாறாத மரங்கள்.
கிளைப்பிரிவில் பறவைக்கூடாய்
குச்சிகளும் முட்களும் அதன்மீதான வைக்கோல் பரவலும்.
இணையாய் நடக்க ஒற்றையடிப் பாதை தோதல்ல;
புல்லில் இறங்க வேண்டும்.
ஏற்கனவே இறங்கியிருக்கும் பனித்துளி
காலணியற்று நடக்கையில்
மேகத்தை உரசிச் செல்வது மாதிரியான
மிதக்கிற உணர்வைத் தரும்.
தென்றல் மட்டுமே காற்றின் வடிவமன்று.
சற்றே பலமான காற்றில்
கூடு சிறிது கலைந்து
முட்துண்டொன்று தரைவிழுந்து
மறைந்திருக்கும் புல்லினூடாக.
அடுத்த காலடியில் காத்திருக்கும்
முள்பதம் கண்டு
கைப்பிடித்து
தன்பக்கம் இழுக்குமாம் நட்பு.

(03.08.2001)
_____________________________________________
* முதல் முயற்சியிலிருந்து திருத்தப்பட்டது.

அலமாரியும் புத்தகங்களும்

வரவேற்பறையிலேயே
புத்தக அலமாரியும் காலணி ரேக்குகளும்
நகரச் சந்தடி!

அலமாரியில் இல்லா புத்தகம்
தந்ததொரு படிப்பினை
இரவலுக்கல்ல புத்தகம்!

தீண்டப்படாமல் வருத்தப்பட்டு நிற்கும்
கண்காட்சியில் வாங்கிய
புத்தகங்களில் சில!

சமையல் புத்தகம்
அலமாரியில் சேருமா?
மனைவிக்கும் எனக்கும் சண்டை!

அலமாரியில் வைக்க முடிவதில்லை
வாசிக்க வேண்டிய
சில மனிதர்களை.

(20.08.2001)

ஓவியக் கண்காட்சியும் பலூனும்

முன்னே ஒரு பரந்த மைதானத்துடன்
ஊரை விட்டுத் தள்ளியிருந்த
அக்கட்டிடத்தின்
மொட்டைமாடியில் வைக்கப்பட்டிருந்த
வித்யா-பூர்ணானந்த்-ன் ஓவியங்களைப் பார்த்துவர
மாலையில் நாம் சைக்கிளில் சென்றபோது
நீ ஜீன்ஸ் உடுத்தி தலையில் பூவும் அணிந்திருந்தாய்.
நீண்ட நேரம் அங்கிருக்க முடியாமல்
இளநீர் அருந்திவிட்டு
சைக்கிளைப் புறக்கணித்து
மைதானம் தாண்டி வடக்கே செல்லும்
இருமருங்கிலும் முட்புதர் மண்டிக்கிடக்கும்
மாட்டுவண்டிப் பாதையில் நடந்தோம்.
மேற்கிலிருந்து சூரியக்கதிர்கள்
மிகமுயன்று முட்புதர்தாண்டி
வண்டிப்பாதையின் புழுதியில்
பொட்டுக்களாய் விழுந்தன.
இன்னும் நடந்தால்
கிணறுகளையும் காற்றுடன்
பேசிக்கொண்டே நடனமிடும்
பச்சை நாற்றுகளையும் பார்க்கலாம்.
எதிர்ப்புறத்திலிருந்து
திடீரென்று சிறார்க்கூட்டம்
நம்மை கடந்து ஓடியதைப் பார்த்து
நாம் திரும்பி நடக்கவாரம்பித்தோம்.
மைதானத்திற்கு வந்திருந்த
பலூன் விற்பவன்
பலூனை சிறார்களுக்கு
இலவசமாக வினியோகித்துக் கொண்டிருந்தான்.
நீ ஓடிச் சென்று
ஒன்று வாங்கிகொள்வாய் எனக் காத்திருந்தேன்.
சிறார்களின் மகிழ்ச்சி
உன் முகத்திலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

(07.09.2001)

மழையும் குடையும்

மழையில் நனைகிறது
குடை!

*

வீட்டிற்குள் மழைநீர்
நீர் வடியும் குடை!

*

ஊனமாய் மூலையில் கிடந்தாலும்
வீதிக்கு வந்துவிடுகிறது
மழை வந்தவுடன் குடை!

*

குடைகள் தடுப்பதில்லை மழைநீரை
தரை சேராமல்!

*

நீ குடை கொணர்ந்தால்
நான் குடை,
இல்லையெனில் மழை!

( 26.03.2001)