March 23, 2008


பனியின் ஓய்வுநேரங்கள்

நான் 104 தெருக்கள் தாண்டிச் செல்கிறேன்
பனிக்கட்டிகளைச் சீராய் ஓடும் நீராக மாற்றும் பணிக்கு,
நாளும் எதிர்ப்படும் ஒரு-கண்-சிறுத்தவன்
விற்றுக்கொண்டிருக்கிறான் விற்கக்கூடிய ஏதோ ஒன்றை

வெற்றுக்காகிதத்தின் வெம்மையைப் பூசி வருகின்றன
என் விடுமுறை நாட்கள், நான் வண்ணங்களிலிருந்து
உருவங்களைப் பிரித்தெடுக்க முயலுகிறேன்,
பச்சைக்காகிதங்கள் என்னைச் சுற்றிப் பறக்கின்றன

பயம் காட்டும் உருவங்களை வரைந்துகொண்டே
நான் பசியாறுகிறேன், நான் ஏறெடுத்துப் பார்க்கும்போது
போதை மறுக்கும் ஊமை வானத்திடம் கேட்கிறேன்:
நீர் ஊற்றாத மேகங்களை நீ என்ன செய்கிறாய்?

அதனிடம் சொல்கிறேன்: ஆற்றுக்கு அப்பால்
இலையற்ற மரங்களை அலைப்படுத்தும் மிகுகாற்று,
கிளைகளில் அமர்ந்திருந்த கரும் பறவைகளோ
அக்காற்றில் மிதந்து மிதந்து மேலேறும்,

அங்கே சுள்ளி பொறுக்கவிடாமல் இடைஞ்சல் தரும்
விலங்குகளிடம் கதைநெய்யும் தந்திரங்களையும்
கதையிருந்து தப்பித்தலையும் சில சிரிப்புகளோடு பேசி
சற்று களைப்பாறுவேன் வேறொரு காலத்தில்

March 4, 2008


உள்ளடக்கம்

முழுவதும் வெண்பக்கங்களாய் திருத்தப்பட்ட இந்தப் புத்தகம், முந்தைய பதிப்புகளில் வார்த்தைகளின் வரலாறைச் சொல்லியது எனவும், அவற்றிற்கிடையே பொதுவாய் காணப்பட்ட வார்த்தைகள் ஒரு சிலவே, அவை வெவ்வேறு இடங்களில் அல்லது வேறு பொருளில் அமைந்திருந்தன எனவும் சொன்னவனுக்கு இதுவரை எத்தனை பதிப்புகள் கண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை

இப்புத்தகத்தை வாசிக்க உதவும் கையேடு ஒன்றை எழுத முயற்சிக்கும் உனக்கு, தாள்களில் அசைந்து கொண்டிருக்கிற மௌனத்தை முகர்ந்து அறியவும், சுற்றி வந்து கொண்டிருந்த வார்த்தைகளை தன் மையத்தினுள் ஈர்த்துக் கொண்ட மௌனமது என்றும் தெரிந்திருக்கவேண்டும்