September 7, 2010


இடக்கை வட்டம்

பெரிய குப்பைத்தொட்டியின் ஓர் உறைந்த கணத்திற்குள் சிந்திய துளி
சர்க்கரை வெல்லப்பாகில் தன் கால்களில் ஒன்று சிக்கிய தேனீயாய்
’நேட்டியோ’ ஹாலின் செப்பனிட்ட வடக்கு வாயிலில் நின்றிருந்தான் P.,
பனிப்புகையாய், கண்களின் ஆழத்தில் புன்னகையுடன் விருந்துக்கு

காலம் தாழ்ந்து அழைப்பவனைப் போல, மெல்ல, சற்று மலர்ந்து
விரிந்த தாமரை கைகளுக்குள் கைகளைப்பற்றி சொன்னான்—
“இன்று காலையில் சீவாத பென்சிலோடு எனது மகன் ஓடி வந்தான்—
’வட்டம், சதுரம், முக்கோணம் எல்லாம் எனக்கு அம்மாதானே

கற்றுக்கொடுத்தாள், நம் வட்டத்தில் யார் இருக்கிறார்கள் நமக்கென்று
உன்னிடம் கேட்டாளே, கிண்ணம் நிறைய உரித்த வெங்காயத்தை
கையிலே ஏந்திக்கொண்டு! எனக்கு அந்த வட்டத்தைக் காட்டு!’ என்றான்,
ஏதும் யோசிக்க முடியாமல், ஏது சொல்வதெனத் தெரியாமல், நான்

‘டேய், அது ரத்தச்சிவப்பு வட்டமடா’ என்று கத்திவிட்டேன், விழி பிதுங்க
அதை அப்போதே பார்த்துவிடவேண்டுமென அவன் நுனிக்காலில்
குதிக்கத் தொடங்கிவிட்டான் தத்தித் தாம் தோம் என, சொம்பு நீர்
உப்புநீராகி வயிற்றை முட்டிக்கொண்டிருக்க, சிறுநீரைக் கழிக்காமல்

குதித்துக்கொண்டே அடம்பிடிப்பவனாய், நீளமான குச்சியை, காய்ந்த
சேற்றுப்பிளவில் நட்டினாற் போல விறைப்பாக நிற்கும் இருவருடன்
ஒரு சிறுவனை, நிறமற்ற கோலிக்குண்டாக, கேலிச்சித்திரம் போல எழுதி
அவசரமாய் கரும்சிவப்பு வட்டமிட்டுக் கொடுத்தேன் இடக்கையால்

அதை அவன் தொடவேயில்லை, கோலமாவுள்ள ஜன்னலில் காக்கை
பிசிறுபிசிறாய் கரைந்து முடிக்கும்வரை என்னை முறைத்துப் பார்த்தான்,
’கூரையில்லாத சிவப்பு ஜீப்பும் மந்திரச்செருப்புகளும் வேண்டுமே,
கோலிக்குண்டு சிறுவனின் காலருகே காணோமே?’ என்று கேட்டு

பால்வண்ணம் திரிந்த முன்வரிசைப் பற்களைக் கடித்தவனிடம்
'நீயே வரைந்துகொள்’ என்று தூரிகையைக் கொடுத்து வந்துவிட்டேன்
எல்லோருக்கும் முன்பே, இங்கிருக்கும் அரசமரத்தில் ஏறியும் இறங்கியும்
தாவிச்செல்லும் அணில்களின் வாலசைவிலே மறைந்தது பொழுது”