November 30, 2008


மையங்களற்ற வையங்களில்

நீண்டு கிளைக்காமல் மீண்டும் அகலமாகும் பாதைகளில்
பூத்திருந்த மரங்களும் சில புல்லாங்குழல்களும்
தொலைந்துவிட்டன நாட்களுக்கான விதைகளைத் தராமல்

கடவுளர்கள் முன்பே இறந்து போய்விட்டார்கள்
குரல்கள் கரைகின்றன, நெரிசல்கள் மிகுகிறது, பாதைகளில்
இனி உண்மைகளைக் கண்டறியத் தேவையில்லை

படிக்கட்டுகளின் எல்லைகளில் கட்டிடங்கள் நிற்கின்றன
படிக்கட்டுகளில் அர்ச்சுனர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்,

கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் பிரதிபலிக்கும்
ஒற்றை வானத்தில் வெளுத்த மேகங்களின் பயணங்கள்!
பலப்பலப் பயன்கள் பொதிந்த பொருட்கள் நிறைந்த அறைகளின்
வெளிச்சுவர்களை உரசிச் செல்கின்றன தென்றல்கள்!

November 15, 2008


மலையின் மீது காலையும் மாலையும்

சிலபொழுதுகளில்
வானத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது போலவும்
சிலபொழுதுகளில்
வானத்தைக் கூராகக் குத்துவது போலவும் தெரிந்த
மலையுச்சி,
உச்சியை அடைந்ததும்
சமதளமாக
அமர்ந்துகொள்ளத்தக்கதாக இருக்கிறது;
மலைகள்,
வானத்தைத் தொடுவதே இல்லை;
தொடுவானம்,
கீழிறங்கித் தெரிகிறது, மலையின் மீதிருந்து காணும்போது;
தொடுவானத்திற்கும்
கீழே, முதலில் நிகழ்ந்து விடுகிறது காலை;
அதோ
காலையை அல்லது மாலையை நோக்கிச் செல்கின்றனவே,
அவற்றோடு
நாமும் நகர்ந்து கொண்டிருக்கிறோம்;
நாம்
பார்த்துக் கொண்டே இருக்கும்போது,
காலை
நிகழ்கிறது இந்தத் தொடுவானில், அது போலவே
மாலை
நிகழ்கிறது அந்தத் தொடுவானில்

November 5, 2008


இரண்டு நாட்களுக்கிடையில் ஒரு பழம்

(தேவதச்சனுக்கும் வில்லியம்ஸுக்கும்)

இரண்டு நாட்களுக்கிடையே
நான் சிக்கியிருக்கிறேன்,
நான் இங்கே தனித்தில்லை,
என்னிடம் ஒரு புகைப்படம் இருக்கிறது,
அதை எடுத்துப் பார்க்க முடியாதபடி,
அசைய முடியாதபடி, நான் சிக்கியிருக்கிறேன்,
இல்லை, நான் எதையும் யோசிக்கவில்லை,
இந்த நிலைத்த கணங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்