April 29, 2008


இன்னுமொருவித‌மாய் வான‌ம்

அரிய‌, க‌ல‌ப்ப‌ற்ற‌, வ‌லுவான‌
உலோக‌த்திற்குப் ப‌திலாக‌, தினமும்
வெளிர்நிற‌ப் பூக்களைப் பூக்கும் கொடியினைக் கொண்டு
கிரீட‌ம் செய்யச் சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு,
பூவையோ, ஏன் கிரீட‌த்தையோ கூட‌,
ஆளுக்கு ஒன்றென கொடுத்துவிடவேண்டும்

கிரீட‌த்தைச் செய்த‌வ‌ரும், அணிப‌வ‌ரும்,
அவ‌ர் ஒருவ‌ரே ஆனாலும்,
கிரீட‌த்தின் நிழ‌லைக் க‌ண்டு க‌ண்கூசுப‌வ‌ர்க‌ளிட‌ம்,
'கிரீட‌ங்களை ம‌ன்ன‌ர்தாம் அணிய‌வேண்டும்'
என்ப‌தைச் ச‌ளைக்காம‌ல் ம‌றுக்கும் போதுதான், அணிந்தால்
கழற்றமுடியாத பிரச்சினையை அது த‌ருகிற‌து
என்னும் உண்மை அவ‌ர்க‌ளுக்குப் புரியும்; க‌ண்ணாடியில்,
தலை அல்லது கிரீட‌ம், இதில் ஒன்று மட்டுமே
தெரிகிற பிரச்சினையும் அதைப் புரிந்துகொள்ளும் திற‌மும்
அவ‌ர்க‌ளுக்கு வாய்க்கப் பெறவில்லை

'எல்லோருக்குமான கிரீட‌ம்,
வான‌ம்தான்', என்னும் வசனத்திற்குள்,
'இப்போதுதான் பிற‌ந்த‌ குழ‌ந்தைக்கு,
இத்த‌னை க‌ன‌மாய்த் தெரியும் கிரீட‌ம் எத‌ற்கு?'
என்கிற‌ கேள்வி மறைந்திருந்தாலும்
வான‌த்தையும் கிரீட‌த்தையும் பற்றி
தங்களுக்குள்ளே விவாதித்துக் கொள்வ‌து
த‌த்துவ‌வாதிக‌ளின் ப‌ணிதானே?

April 24, 2008


பால‌த்தின் தூண்க‌ளுக்கிடையேயான‌ தூர‌ம்

கண்ணாடியைப் பார்க்க மறுப்பவனின்
அறியாமையை நீ நம்ப ஆரம்பித்த பிறகு, அது
உன்னைப் பீடித்து, இப்போது பரவிக் கொண்டிருக்கிறது

உன்னிடம் இருப்பது ஒளியா, இருளா
என்று தெரியாத நிலையில், அறியாத ஊரின் தெருவில்
நின்று, பகிர்தலைப் பற்றி என்ன சொல்லப் போகிறாய்?

வார்த்தைகளையும் முகங்களையும் விற்பவனின்
உதவியுடன் நீ கவிதை எழுதிய பின், எஞ்சியிருக்கும் இரவை, உன்
பிம்பத்தைச் சரிசெய்ய செலவிடாமல், விண்ணில்
எறிந்துவிட முடிவெடுத்திருக்கிறாய், சரி, சற்று இளைப்பாறு!

ஊற்றுக்க‌ண் அ‌ற்ற‌ பிரகாசமான ஒளியை, நேர்ப்படுத்தி,
பஞ்சத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் பாலம் அமைக்க
ஒரு தூணாக உன்னை நிறுவிக்கொள்கிறாய்

April 17, 2008


சென்னையின் நீச்சல்குளங்கள்

வேறிடத்தில் இருக்கும் வேர்கள், பூக்க‌ளுக்கு வேருண்டு என்ப‌து,
வேர்க‌ள் பூப்ப‌து, நீர் விநியோகம்-இவை, வான், கடல்,
நட்சத்திரங்களைப் போல அற்புத‌மாயிருக்கின்ற‌ன‌

இடங்களை நகர்த்தும் ச‌க்க‌ர‌ உருளைகளாய்
எண்க‌ளைத் துற‌ந்த‌ கடிகாரங்கள்; நொடிமுள்ளின் சத்தம்,
பிற‌ எல்லாவற்றிற்கும் சுருதியாய் உதவுகிறது

நிலத்திலும் காற்றிலும் நீல‌த்தைப் பரப்பும் இரவும்
பகலும், த‌ன்னையே உண்டு வாழும்; வானத்தையும்
நிலத்தையும் இழந்த பறவையாகிக் கொண்டிருக்கும் நகரத்தில்,

வாசல்கள் தெற்கைப் பார்த்திருக்கின்றன; வாசலற்ற
வீடுகள், கடலிலிருந்து எழுந்து வரும் சூரியனிடமிருந்து
மறைந்திருக்கும் மரநிழலில்