December 28, 2008


ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு சருகு

1 ஆற்றிசை

ஆறு போல இசை
பேரொளியாய் பாய்ந்துகொண்டிருந்தது,
நாம் கைகோர்த்தபடி
கரையில் நின்று கொண்டிருந்தோம்,
ஆற்றுக்கு அப்பால்
பேரொளி மட்டுமே இருந்தது,
ஆற்றுக்குப் பொருத்தமான வரிகளை
நாம் நிதானத்தோடு எழுதினோம்,
நம்மையும்
ஆற்றோடு போகும் அனைத்தையும் கவனித்தபடி
நாம் எழுதிய வரிகள்
ஆற்றுக்குள் மெதுவாக ஊர்ந்து இறங்கின,
வரிகள் ஆற்றில் மரக்கால்களைப் போல மிதந்தன,
ஆறு அவற்றை நகர்த்திச் சென்றது, பிறகு
அவை ஆற்றிலிருந்து எழுந்து வந்து
நம்மருகில் நம்மோடு
ஆற்றைப் பார்த்துக்கொண்டு நின்றன.


2 ஆற்றா இசை

குளிர்காலத்திலும், மங்கிய வெளிச்சங்களிலும்,
இரவுகளிலும், கோடைமழைப் பொழிவிலும்,
மலைச்சரிவிலும், கூழாங்கல் படுகைகளின் மீதும்
நமது கதை நிகழ்கிறது

இந்த இடங்கள் நமது கதையின் பெருமையைச்
சூடிக்கொள்ள நாம் இடம்தரப் போவதில்லை,
நேரமற்ற நேரத்தில் அணிந்த ஆபரணமாய்
எந்நேரமும் நம் மணிக்கட்டைப் பற்றியிருக்கிற

கடிகாரம், காலநிலையைப் பற்றி கவலைகொள்ளாது;
கதை எங்கு நிகழ்ந்தாலும், பாறைநிலத்திலோ,
மழைக்குப் பிறகு ஒற்றையடிப்பாதையிலோ,
எந்தப் பொழுதில் நிகழ்ந்தாலும், அது நமது கதைதான்

விடியலுக்கு முன்பே நாம் தெருவில் இறங்கிவிட்டோம்,
தொலைவில் நம் இல்லம் கரும்புள்ளியாகி மறைகிறது,
நம் கையிலிருந்த மாதுளம்பழங்களை வழியில்
செந்நாய்களை நோக்கி எறிந்துவிட்டோம்

நமது கதைமரபின்படி, ஒவ்வொரு திருப்பத்திலும்
நாம் ஏதாவது ஒன்றை விடுத்துச் செல்கிறோம்,
நாம் நடந்து வந்திருக்கும் தொலைவு
நம் மகிழ்ச்சியின் தொலைவைக் காட்டுகிறது

நமக்குத் தாகம் ஏற்படுவதில்லை,
நாம் வெற்றுடலுடன் ஆற்றோரமாய் நடக்கிறோம்,
சத்தமெழுப்பாமல் நடக்க நமக்குப் பழகிவிட்டது,
ஒருவர் பேசும்போது ஒருவர் அமைதி காக்கிறோம்

நம்மை மறக்கச் செய்த இசையில்
கரைய இயலாமல் கரை திரும்பிய வரிகளை
நாம் உதடசையாமல் சொல்லிக்கொள்கிறோம்,
நமக்குத் தாகம் ஏற்படுவதில்லை.

No comments: