October 2, 2008


பூமியின் பறவைகள்

நீ ஒவ்வொரு செடியாய் தாவித் தானியம் உண்கிறாய்,
எங்கள் உலோகச் சிறகுகள் மேலும் கீழும் அசையாது,
பரந்துபட்ட கோணங்களில் பறக்கவே நாங்கள்
ஆசை கொண்டோம், நாங்கள் பூமியைத் தாண்டிவிட்டோம்

சிறகு என்பதற்குச் சுதந்திரம்
என்று பொருள் கொண்டனர், எங்களில் பாதிப்பேர்,
எப்போது தெரியுமா? சிறகுகளுடன்
தேவதைகள் காட்சி தந்தபோது

காதுகளை விசிறியபடி இருக்கும் யானைகளுக்குப்
பறக்கச் சொல்லிக் கொடுத்து
பலத்த காயங்களை யானைகளுக்குத் தந்து
தாங்களும் பெற்றனர் எங்களில் சிலர்

எங்களின் பரந்துபட்ட பார்வையால்
எங்களுக்கு வேண்டியனவற்றை அதிகரித்தும்
எங்களுக்கு வேண்டாதனவற்றை அழித்தும்
சிறகு என்பதற்கு ஆற்றல் என்றொரு பொருள் அறிந்தோம்

வேற்றுகிரகத்தில் எங்களைச் சந்திக்க நேர்பவர்கள்
அறியாமையாலோ பட்டப்பெயராகவோ
எங்களை 'பூமியின் பறவைகள்' என்று அழைத்தால்
நீ வருத்தம் கொள்ளாதே, பறவையே!

உன் நளினமான பறத்தலைக் கண்டு, எங்களில் சிலர்,
உன் மென்மையான சிறகுகளையே விரும்புகின்றனர்,
தற்காக்கும் முயற்சிகளுக்கும் தண்ணீரைத் தேடவும்
அவர்களுக்கும் வளரட்டுமே உன்னைப் போன்ற சிறகுகள்!

1 comment:

naadal said...

good, I am also flying even though I am not having wings, as earth is flying ,i am also flying. so flying itself is relative your poem talks about flying w.r.t earth. ( Just read few pages of Einstien's Relativity from google books today morning)