August 2, 2009


காதுமடலோரம் காற்றும் ஓசையும்

மாலையின் கிழக்குக் கடற்கரையில் ஈரமணலும்
உலர்ந்த மணலும் கிடக்கிறது, வீடுகளுக்கு
எடுத்துச்சென்றது போக எஞ்சிய சிப்பிகளோடு,

சாய்ந்து கொண்டிருக்கிற செஞ்சாந்து ஞாயிறுக்கு
நீ முதுகுகாட்டி அமர்ந்திருக்கிறாய், ஈரமணலின்
வண்ணத்தில் நீ கால்சராய் அணிந்திருக்கிறாய்,

வானும் கடலும் நீலமிழந்து கொண்டிருக்கின்றன,
உன்னருகில் ஒருவரும் இல்லை, அலைகள்
எழுந்து முன்வளைந்து உடைந்து வெளுக்கின்றன,

நீ எழுந்து சற்று நடந்து வேறிடத்தில் அமர்கிறாய்,
நீ குளிரை உள்சுவாசிக்கிறாய், காற்றிலிருந்த
உப்பு, உன் காதுமடலில் படிகிறது,

கடல்-தொடும்-வானத்தில் ஒரு கப்பல் வரப்போகும்
இரவுக்குள் நீந்த ஆயத்தமாகிறது, வலையுடன்
கட்டுமரங்கள் கடலுக்குள் நுழைகின்றன,

உதடுகள் வறண்டிருக்கின்றன, வெற்றுக்கண்ணில்
தெரிகிறது வானின் ஆழம், உயிருடன் மீன்களை
எடைநிறுக்கும் தெருவில் நீ நடந்து செல்கிறாய்.

1 comment:

naadal said...

எளிய நடை