August 18, 2008


கனவுத்திணை

பார்வை - 1 : உருவம்

கனவில் ஆபத்துகள் நிறைய,
கனவில் உயிர் வாழவேண்டும் என நினைத்தால்
அது கனவினையே அழித்துவிடும்


பார்வை - 2 : அணி

கே: ஒளி-ஒலி எப்படி இயங்குகிறது?
ப: கண்ணுக்குள் பாய்ச்சப்படும் ஒளி கனவினைச்
சென்று சேராது; கனவில் ஒலி, ஒலியற்றதாக இருக்கிறது

கே: எத்தகைய பரப்பில் கனவு முகிழ்க்கும்?
ப: வண்ணங்களைத் தீவிரமாக நம்பும் மனதிற்கும்
சிந்தனை மறுத்த மூளைக்கும் இடையிலான பரப்பில்

கே: எந்த வயதில் கனவு காணத் தொடங்கலாம்?
ப: இந்தக் கேள்விக்குப் பயன்தரக்கூடிய பதில் இல்லை

கே: கனவில் இன்றியமையாதது என்ன?
ப: எதுவுமில்லை; நீர், காற்று,
மொழியும்கூடத் தேவையில்லை

கே: கனவுப்பிரதேசம் என்ற ஒன்று உண்மையில் உள்ளதா?
ப: இந்தக் கேள்விக்கும் பயன்தரக்கூடிய பதில் இல்லை

கே: கனவு காணத் தொடங்கிவிட்டு, பின் நிறுத்திவிட்டால்
தீங்கு ஏதும் ஏற்படுமா? எந்தவிதத் தீங்கு ஏற்படும்?
ப: இந்தக் கேள்விக்கும் பயன்தரக்கூடிய பதில் இல்லை

கே: கனவினைப் போற்ற மந்திரங்கள் உண்டா?
ப: 'கனவு எல்லாவற்றுக்கும் முதன்மையானது',
'நாம் கனவிலிருந்து பிறந்தோம்'


பார்வை - 3 : வெளி

பார்வையின் கேள்விகள் நிச்சயமற்று நீந்துகின்றன;
கனவு வெளியும் காண்பவர் வெளியும்
(இவற்றில் நீர் எது, சாயம் எது எனத் தெரியாது)
நீருக்குள் சாயம் போல ஒன்றினுள் ஒன்று நுழைகிறது


பார்வை - 4 : சுயம்

04.01. கனவென்பது இன்பமல்ல

04.02. சுயம், முகத்தை அணியாமல் கனவில் வரும்

04.02.01. முகமூடி அணிந்து கொண்டு கனவு கண்டாலும்,
சுயம் கனவில் வரும்

04.02.02. சுயம் தொலைவதற்கான இடங்கள் கனவில் உண்டு
(எ.கா: பாறைமேல் அமர்ந்து இடதுபக்கம்
திரும்பிருக்கும் அலகிழந்த பருந்து)

04.03. கனவு பரிமாணங்களை அழிக்கிறது

04.03.01. கனவில் தெரியும் தரை உண்மையல்ல

04.03.02. கனவில் எல்லைகளைத் தேடக் கூடாது

04.03.03. வானத்தையோ, நிலத்தையோ கனவில் காண்பது
சுயத்தின் மதிப்பைக் குறைக்கும்

04.03.04. எல்லாக் கனவுகளும் ஏறக்குறைய முடிவு பெறாதவை

***

3 comments:

Anonymous said...

this is superb; is it intentional that you used a project Charter format for a topic that can not be bound in any sense? i like it.

இரா. சுந்தரேஸ்வரன் said...

Thanks vasu! if it looks that way, it is purely incidental.

naadal said...

Kanvugal kalngaluku apparpattahthu ,
athai kalangalil varnipathu kanavugalai koondukkul adaikka kaanum kanavu.
looks like you are having more dreams now a days.
Kavithai is good.