March 23, 2008


பனியின் ஓய்வுநேரங்கள்

நான் 104 தெருக்கள் தாண்டிச் செல்கிறேன்
பனிக்கட்டிகளைச் சீராய் ஓடும் நீராக மாற்றும் பணிக்கு,
நாளும் எதிர்ப்படும் ஒரு-கண்-சிறுத்தவன்
விற்றுக்கொண்டிருக்கிறான் விற்கக்கூடிய ஏதோ ஒன்றை

வெற்றுக்காகிதத்தின் வெம்மையைப் பூசி வருகின்றன
என் விடுமுறை நாட்கள், நான் வண்ணங்களிலிருந்து
உருவங்களைப் பிரித்தெடுக்க முயலுகிறேன்,
பச்சைக்காகிதங்கள் என்னைச் சுற்றிப் பறக்கின்றன

பயம் காட்டும் உருவங்களை வரைந்துகொண்டே
நான் பசியாறுகிறேன், நான் ஏறெடுத்துப் பார்க்கும்போது
போதை மறுக்கும் ஊமை வானத்திடம் கேட்கிறேன்:
நீர் ஊற்றாத மேகங்களை நீ என்ன செய்கிறாய்?

அதனிடம் சொல்கிறேன்: ஆற்றுக்கு அப்பால்
இலையற்ற மரங்களை அலைப்படுத்தும் மிகுகாற்று,
கிளைகளில் அமர்ந்திருந்த கரும் பறவைகளோ
அக்காற்றில் மிதந்து மிதந்து மேலேறும்,

அங்கே சுள்ளி பொறுக்கவிடாமல் இடைஞ்சல் தரும்
விலங்குகளிடம் கதைநெய்யும் தந்திரங்களையும்
கதையிருந்து தப்பித்தலையும் சில சிரிப்புகளோடு பேசி
சற்று களைப்பாறுவேன் வேறொரு காலத்தில்

1 comment:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குப் பிடித்திருக்கிறது கவிதை.