June 11, 2008


மரத்தின் பாகங்கள்

இளங்காலையில், மதிய உச்சியில்,
இன்னபொழுது எனச் சொல்லமுடியாமல்
மாறிக்கொண்டிருந்த பொழுதுகளில்,
பொழுதுகளை அறியாமல்,
அறிய விரும்பாமல் கழித்த கால‌ங்க‌ளில்
இம்மரத்தினடியில்தான் நாமிருந்தோம்

சொரசொரப்பான அடிமரத்துப்
பட்டைகளின் மீது விளைந்த
கிளர்ச்சியில் கண்மூடிக் கிடந்தோம்,
இன்று கிளைகளுக்கிடையே காணும்
சிறுசிறு வான்துண்டுகளை,
எப்பொழுதிலும் நாம் கண்டதில்லை

தயங்கித் தயங்கி அருகே வந்து
சென்ற பருவத்து வித்துக்களையோ
எறும்புகளையோ கொத்திய பறவையையும்
முன்பு மரத்திலிருந்து
கேட்ட ஒலிக்குறிப்புகளையும்
நாம் பொருத்திப் பார்த்ததில்லை

விரும்பிய தூறலையும்
எதிர்கொள்ள இயலாத சுழ‌ல்காற்றையும்
ந‌ம்மோடு அனுப‌வித்த‌ இம்ம‌ர‌ம்
இவ்வாண்டில்
பூக்கும் ப‌ருவ‌த்தை எட்டும்முன்
நாம் பிரிந்துவிட்டோம்

ந‌ம்மைப் பார்த்துக் கொண்டே,
நம் பேச்சுக்களையும்
நம் மௌனங்களையும் கேட்டுக் கொண்டே,
மரம் ஓர‌ங்குல‌மாவ‌து வ‌ள‌ர்ந்திருக்கும்,
ந‌ம் அருகாமை
அத‌ற்கு உர‌மாக‌ச் சேர்ந்திருக்கும்

சாய்வாக விழுந்த வெயிலின் மீது
மழை விழுந்த‌தில் வானவில் தோன்றும்
வாய்ப்புள்ள‌ திசையை
கால்க‌ளுக்கு நினைவிருக்கிற‌து,
ம‌ழையீர‌த்தில் ம‌ர‌ம் சிந்திய‌ பூக்க‌ளின் மேல்
ம‌ர‌ம் மேலும் ஈர‌த்தைச் சொட்டுகிற‌து

2 comments:

Anonymous said...

Sundareswaran, these are nice poems. I am not sure if you are the same one from Kullursandai. if yes, do wrtie to me @ suvap yahoo dot com.

Unknown said...

Bava Super kavithai. We are still waiting for you Film Project.