December 12, 2010


உயிர் உலை

கூரான விளிம்புகளின் நினைப்பே அப்போது என்னை பரவசப்படுத்தி பரிதவிக்க வைத்துக்கொண்டிருந்தது, நான் கத்தி செய்யும் ஆசையைச் சொன்ன அன்று மாலையில் இருள் கவியும் முன்பே இரும்புக்கொல்லனைக் கண்டுபிடித்துக் கொடுத்தான் கே.வி.எ, தேசிய நெடுஞ்சாலையின் அழகாபுரி விளக்கு சந்திப்பில் இருக்கும் பட்டறைக்குப் போகச்சொன்னான், இரும்புக்கொல்லனோ, தன் தொழிலுக்கு என்னால் பங்கம் ஏதும் வந்துவிடாதென்று முதலிலேயே சொல்லிவிட்டு, நட்பு பாராட்டும் விதமாய், தனக்கென தொழில் ரகசியம் ஏதுமில்லை என்று என்னை பதட்டமில்லாமல் சகஜமாயிருக்கச் சொன்னான், நெஞ்சமெல்லாம் வியர்த்து வெற்றுமார்பிலே நீர் ஆபரணம் அணிந்தவனாய், செஞ்சூட்டிற்கு நடுவில் சூடாகிப் பழுத்த இரும்பை கனத்த சுத்தியால் அடித்து வேலை செய்தாலும், தன்னை மறந்து தன் கண்களில் திருப்தியை மின்னச் செய்யும் கத்தியாக மாறும்வரை அதைச் செய்பவன்... அவன் கலைஞனல்லவா? அவன் செய்த உருவத்திற்கு இன்னொருவன் உயிர் கொடுக்கிறானே எனும்போது, மனித ஆவேசத்துடன் உடலில் பாயும் கத்தி உள்ளே ஆழமாய் செல்லும் அதே கணங்களில் உடலின் பலவீனத்தையும் உயிரின் பலவீனத்தையும் புலனறியச் செய்வது... கலையம்சமல்லாமல் வேறென்ன? ஆனால் இரும்புக்கொல்லனைக் கலைஞனல்லன் என்றுவிட்டான் கே.வி.எ, அவன் வேற்றாருக்காக ஆயுட்காலம்வரை உழைக்கும் கருவிகளைச் செய்து தருபவனல்லவா? என்றான்

No comments: