June 23, 2008


பயணியைத் தொலைத்த பயணம்

வெளிச்சத்தையும் எடையையும் வெளியில் எறிந்த பிறகு
வேகம் மட்டுமே ஒளியாகிறது, வண்ணம் என்பதே
வடிவமாக இருக்க இயலும் என்பதன் ஆதாரங்களை
வானில் காண்கிறான்

பிம்பங்கள் தந்து சுமை கூட்டும் காகிதமும் பேனாவும்
கண்ணாடியும் விடுத்து பயணிப்பவனுக்கு
காகிதங்களின், கண்ணாடியின் எல்லைகளுக்குள்
பயணமென்று ஒன்று உண்டா?

குறுக்கிடும் ஆற்றின் கரையோரமாய் நடந்து
படகை அல்லது பாலத்தைச் சந்திக்கும் வரை
அவன் ஆற்றின் பயணத்தை ஆடையாக அணிந்துகொள்கிறான்

வயலில் பெய்யும் மழையில் மென்நினைவுகளோ
சுயமௌனமோ மேலெழும் முன்னமே
மழையின் சத்தம், அவனைக் கரைத்துக்கொள்கிறது

No comments: